ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக, சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றவியல் கும்பல்களை ஈரான் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று மேற்படி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இவ்வாறு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
“எங்கள் நாட்டு மண்ணில் உள்ள மக்களைக் கொல்ல முயல்வது, கடத்துவது, துன்புறுத்துவது, அச்சுறுத்துவது போன்றவை எங்களது நாட்டின் இறையாண்மையையும் சர்வதேச விதிகளையும் சீர்குலைப்பதாகும்.
எனவே, இந்த நடவடிக்கையை ஈரான் உடன் நிறுத்த வேண்டும்.
எங்கள் நாடுகளையும் எங்கள் மக்களையும் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நிற்கிறோம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த நடவடிக்கைகளை இப்போதே நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது
ஈரானுடன் தொடர்புடைய ‘ஹரகத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா’ (HAYI) என்ற குழுவினால் ஐரோப்பா முழுவதும் யூத சமூகங்கள், ஈரானிய ஊடகவியலாளர்கள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே இருப்பதாக இந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
The Islamic Movement of the People of the Right Hand என்று பொருள்படும் இந்த HAYI குழு, பிரிட்டன் , பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக வடக்கு லண்டனில் இரண்டு யூத ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதற்கும், யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக மையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தீவைப்புத் தாக்குதல்களுக்கும் தாங்களே காரணம் என்று HAYI அமைப்பு கூறியதாகத் தெரிகிறது.










