ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (Sanae Takaichi) தெரிவித்தார்.
“இப்போதும் கூடப் பலர் மீட்புக்காகக் காத்திருக்கிறார்கள், இது நேரத்துடன் போட்டியிடும் ஒரு போராட்டம். முடிந்தவரை அதிகமான மக்களைக் காப்பாற்றவும் மீட்கவும் களத்தில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம்,” என்று டோக்கியோவில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தாகாய்ச்சி கூறினார்.
முன்னதாக மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சாலைகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
புதன்கிழமை அதிகாலை, பகுதி அளவு இடிந்து விழுந்த ஒரு வணிக வளாகத்தின் (Shopping Mall) இடிபாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் எட்டு பேரைக் மீட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் 20 வயதுகளிலேயான இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
வாயுக்கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவசர தீயணைப்பு மீட்புக் குழுக்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் உதவி கேட்டு அழைப்புகள் வந்த கட்டிடப் பகுதிகளில் தீவிரமாகக் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த பேரிடரின் முழுமையான பாதிப்பு நிலவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, வணிக வளாகத்தில் பணியாற்றிய 20 முதல் 30 ஊழியர்களைக் காணவில்லை எனத் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே (NHK) தெரிவித்துள்ளது.
நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ் (Nippon Paper Industries) தொழிற்சாலையில் புகைபோக்கி (Chimney) இடிந்து விழுந்ததில் ஏழு பேரைக் காணவில்லை என்றும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்குள்ள மருத்துவமனைகளில் பல டஜன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பும் ஒரு பயங்கர நிலநடுக்கத்தைச் சந்தித்த இந்த மாகாணம் முழுவதிலும் உள்ள சுமார் 2,60,000 மக்களைப் பாதுகாப்பான வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 7,00,000 மக்கள் தொகை கொண்ட மத்திய கியூஷுவின் (Kyushu) மிகப்பெரிய நகரமான குமாமோட்டோ நகரத்திற்கு தெற்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளைப் பலமாக உணர்ந்த பகுதிகளில் வாழும் மக்கள், நிலச்சரிவு அபாயம் மற்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு ஏற்படக்கூடிய வலுவான அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
