ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஜப்பானுக்குத் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் (ASEAN) சேர்ந்த பிரதமர்களுடன் இணையவழியில் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து, ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி இந்த உதவிப் பொதியை அறிவித்துள்ளார்.
இது மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான கடன்கள் மற்றும் கையிருப்பை விரிவுபடுத்துதல் போன்றவற்றின் மூலம் பிராந்தியம் முழுவதும் எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“விநியோகச் சங்கிலிகள் மூலம் ஒவ்வொரு ஆசிய நாட்டுடனும் ஜப்பான் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் அவற்றுடன் பரஸ்பரம் சார்ந்துள்ளது,” என்று ஜப்பானியப் பிரதமர் தகாய்ச்சி செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், ஆசியாவில் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறை அல்லது விநியோகத் தடைகள் தனது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் “கணிசமான எதிர்மறை தாக்கத்தை” ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட இந்த நிதியுதவியானது, 1.2 பில்லியன் பீப்பாய்கள் வரை – அதாவது ஆசியான் நாடுகளின் சுமார் ஓராண்டு மசகு எண்ணெய் இறக்குமதிக்குச் சமமானது என்றும் அவர் கூறினார்.
மருத்துவ வசதிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உட்பட, பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பொருட்களை ஜப்பான் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்தப் பகுதியில் உள்ள பல நாடுகள் குறைந்த அளவிலான எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளதால், விநியோகப் பற்றாக்குறை இறுதியில் ஜப்பானுக்கான ஏற்றுமதிகளைப் பாதிக்கக் கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட வழிவகுத்த போரின் பின்னணியில் ஏற்பட்ட எண்ணெய் விலைகளின் திடீர் உயர்வு, சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இறக்குமதிக்கான பணத்தைச் செலுத்தும் திறன் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
அரசாங்க ஆதரவு பெற்ற ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி வழியாக வழங்கப்படும் கடன்கள் உட்பட, நிதி உதவியின் மூலம் இந்த அபாயங்களைச் சமாளிக்க டோக்கியோ திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய ஆதரவுத் திட்டத்தில் ஜப்பானின் இருப்புகளிலிருந்து நேரடி மசகு எண்ணெய் ஒதுக்கீடுகள் இல்லை என்றும், எனவே இது உள்நாட்டு விநியோகங்களை எதிர்மறையாகப் பாதிக்காது என்றும் ஜப்பானியப் பிரதமர் வலியுறுத்தினார்.
மசகு எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய கிழக்கை பெரிதும் சார்ந்திருப்பதால், ஜப்பான் தனது நாட்டில் ஏராளமான எண்ணெய் இருப்புகளைப் பராமரிக்கிறது.
ஜப்பான் தலைமையிலான, தலைவர்கள் மட்டத்திலான மெய்நிகர் கூட்டத்தில் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், புருனே, கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, சிறிலங்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், ஜப்பானிய அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி வளங்கள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் ஆசியாவே மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியம் என்பதை பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றும், அந்த வழித்தடத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்திற்கு உடன்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
