ஜப்பான் அரசியலில் புது அத்தியாயம்: பதவியில் இருக்கும்போதே பிரசவ விடுமுறை எடுத்த பெண் மேயர்

ஜப்பானின் சிறிய நகரம் ஒன்றின் பெண் மேயர், பதவியில் இருக்கும்போதே மகப்பேறு விடுப்பு (Maternity leave) எடுக்கும் நாட்டின் முதல் மேயர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். திங்கள்கிழமை எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாட்டில் சில விமர்சனங்களை எதிர்கொண்ட அதேவேளையில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேற்கு ஜப்பானில் சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவாதா (Yawata) நகரின் மேயரான ஷோகோ கவாட்டா (Shoko Kawata), கடந்த 2023-ஆம் ஆண்டு தனது 33-வது வயதில் ஜப்பானின் மிக இளம் வயது பெண் மேயராகப் பொறுப்பேற்றபோதே குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

இருப்பினும், யவாதா நகர ஊழியர்களுக்கு 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், மேயர் பதவிக்கு அத்தகைய விதிமுறைகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் இதற்கான புதிய விதிமுறையைத் தானே உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.

“மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்து நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதுவரை இங்கு இளம் பெண்களோ அல்லது பொதுவாகப் பெண்களோ மேயராக மாறுவது மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது என்பதை இது எனக்கு உணர்த்தியது,” என்று வெள்ளிக்கிழமை யவாதா நகர அலுவலகத்தில் வைத்து கவாட்டா தெரிவித்தார்.

மகப்பேறு விடுப்பில் செல்வதற்கு முன், அவர் தனது இறுதிப் பொதுப் பணியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற யவாதா தைக்கோ (Taiko) திருவிழாவிற்கான வீதி ஊர்வலத்தில் பங்கேற்றார். பாரம்பரிய முறைப்படி ‘மிகோஷி’ (Mikoshi – சிறிய சிண்டோ கோவில் வாகனம்) மீது அமர்ந்து செல்லாமல், கர்ப்பிணியாக இருந்த கவாட்டா அதற்குப் பின்னால் நடந்து சென்றார்.

கடந்த ஆண்டு ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தாகைச்சி (Sanae Takaichi) பொறுப்பேற்றபோதிலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டின் அரசியலில் பாலின இடைவெளி இன்னமும் அதிகமாகவே உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சமீபத்திய பாலின இடைவெளி அறிக்கையில் 148 நாடுகளில் ஜப்பான் 118-வது இடத்தையும், அரசியல் அதிகாரம் பிரிவில் 125-வது இடத்தையும் பிடித்துள்ளது.

வயதான மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜப்பான், உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களில் ஒன்றை மேம்படுத்த வேண்டுமானால், இத்தகைய சீர்திருத்தங்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாகக் கவாட்டா கூறினார். ஜப்பானிய பெண்களுக்குச் சட்டப்பூர்வமாக சுமார் 14 வாரங்கள் மகப்பேறு விடுப்பு பெற உரிமை உண்டு. அக்காலக்கட்டத்தில் அவர்கள் தங்கள் ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கையும் பிறப்பு போனஸையும் பெறுகிறார்கள். எனினும் சில அரசு ஊழியர்களுக்கு இதைவிடச் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.

“மக்கள் பாலின சமத்துவம் மற்றும் வேலை கலாச்சாரச் சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், தலைவர்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் உள்ள மக்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்காத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். இல்லையெனில், வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதத்தால் தொடர்ச்சியான மக்கள் தொகை குறைவு மற்றும் பொருளாதாரச் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது,” என்று அவர் கூறினார்.

உள்ளூர்வாசிகளில் பெரும்பாலோர் தமக்கு ஆதரவளிப்பதாகவும், சகாக்கள் விடுப்பு எடுக்க ஊக்குவிப்பதாகவும் கூறிய கவாட்டா, ஊடக வெளிச்சத்தால் இணையத்தில் எழுந்த சில விமர்சனங்கள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். வரும் செப்டம்பரில் அவருக்குக் குழந்தை பிறக்கவுள்ளது.

“இதற்கு முன் என்னைப் பற்றி அறியாதவர்கள், எனது மகப்பேறு விடுப்பு பற்றிய செய்திகள் மூலமாகவே என்னை அறிந்தனர். இணையத்தில் சிலர், ‘நான் வேலையைச் சரியாகச் செய்யாமல் விடுப்பு எடுப்பதற்காக மட்டுமே அங்கு இருக்கிறேன்’ என்று விமர்சித்தனர். அது ஏமாற்றமளிப்பதாக இருந்தது,” என்றார்.

பெரும்பாலான யவாதா நகரவாசிகள் கவாட்டாவின் முடிவை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். இருப்பினும், இல்லத்தரசியான சீ புஜிதா (Chie Fujita) உள்ளிட்ட சிலர், விடுப்பில் இருக்கும்போது மேயருக்கு முழுச் சம்பளம் வழங்கப்படுவதை விமர்சித்தனர்.

“நானும் ஒரு பெண், குழந்தை பெற்றவள். எனவே பெண்ணின் உரிமையாக அவர் பிரசவத்திற்கு விடுப்பு எடுக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் விடுப்பில் இருக்கும்போது அவருக்கு 100% சம்பளம் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று புஜிதா கூறினார்.

Related Articles

Latest Articles