அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் எயார்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது நேரடி விமான சேவையை நாளை (ஆகஸ்ட் 25) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இலங்கைக்கான இந்த நிறுவனத்தின் முதலாவது சேவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது ‘JQ5’ விமானம் மெல்போர்னில் இருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5:50 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ‘JQ6’ விமானம் கொழும்பில் இருந்து இரவு 7:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:00 மணிக்கு மெல்போர்னைச் சென்றடையும்.
போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) ரக விமானங்களைப் பயன்படுத்தி வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இந்த சேவை இயக்கப்படவுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே இயக்கப்படும் ஒரே குறைந்த கட்டண நேரடி விமான சேவை இதுவே என்றும், இதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இருக்கைகள் பயணிகளுக்குக் கிடைக்கும் என்றும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் பயண வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் பொது விற்பனை முகவராக (GSA) ஹெய்லீஸ் ஏவியேஷன் (Hayleys Aviation) செயல்படும்.
