தனது குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளில் (Privacy) ஊடகங்கள் தலையிட்டால், பதவியை விட்டு விலகிவிடுவதாக எச்சரித்து, ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார் யுர்கன் க்ளோப்.
உலகக் கோப்பை தொடரின் ‘லாஸ்ட் 32’ (Last 32) சுற்றில் பராகுவே அணியிடம் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜூலியன் நாகெல்ஸ்மேன் (Julian Nagelsmann) இந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, லிவர்பூல் அணியின் முன்னாள் மேலாளரான 59 வயதான யுர்கன் க்ளோப், வெள்ளிக்கிழமையன்று 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஜெர்மனியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
நியமனத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தனது முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே ஊடகங்களுக்கு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“நீங்கள் தவறாக நடந்துகொண்டு, எனது குடும்பத்தினரை அமைதியாக இருக்க விடாவிட்டால், நான் உடனடியாக விலகிவிடுவேன்; இங்கிருந்து சென்றுவிடுவேன்.
தேசிய அணிப் பயிற்சியாளர்கள் இதைவிட மோசமாக நடத்தப்படும் நாடுகள் உள்ளன என்பதை நான் அறிவேன்.
இந்த வேலையை நான் எனக்காகச் செய்யவில்லை, உங்களுக்காகவே செய்கிறேன். ஜூலியன் நாகெல்ஸ்மேன் மற்றும் தாமஸ் டுச்செல் (Thomas Tuchel) ஆகியோரை நீங்கள் எவ்வாறு நடத்தினீர்கள் என்பதைப் பார்த்த பிறகும் நான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு இந்தப் பணி மிகவும் பிடிக்கும்; அதேவேளையில் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து விலகத் தயாராகவும் இருக்கிறேன். ” – என்றார்.தலைப்புகள் சில தரவும்
உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பிறகு, நாகெல்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டுச்செல் ஆகிய இருவருமே ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்.
குறிப்பாக, அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணி தோல்வியடைந்தபோது, டுச்செல்லின் தற்காப்பு உத்திகள் மற்றும் வீரர்கள் மாற்றம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
யுர்கன் க்ளோப்பின் இந்த நியமனம் பல வாரங்களாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2030 உலகக் கோப்பை தொடர் வரை இவரது ஒப்பந்தம் நீடிக்கும்.










