லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.
காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதுவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைக்கீங் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சார்ளஸ் 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், பதிலுக்கு 166 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணிசார்பாக, உபுல் தரங்க 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சில் வனின்டு கசரங்க மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.