மலையக அரசியல் அரங்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து அதனோடு அரசியல் ரீதியாக கூட்டிணைந்து செயற்படுவதற்கு மலையக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக மலையக அரசியல் அரங்கமும் மலையக ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு [22/03] மலையக அரசியல் அரங்கத்தின் மத்திய குழு கூட்டம் ஹட்டனில் இடம் பெற்றது.
இதன்போது இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகம் மயில்வாகனம் திலகராஜா, மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த புரிந்துணர்வுடன் மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பட்ட முன்னிலையில் மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனுக்கு மலையக அரசியல் அரங்கத்தின் ஊவா மாகாண அமைப்பாளர் பதவியும் சங்கத்தின் தலைவர் என். விஸ்வநாதன், அமைப்பாளர் எஸ். ராஜாராம், அமைப்பாளர் எஸ்.தியாகராஜா செயற்பாட்டாளர் அ. சுந்தரேசன் ஆகியோருக்கு அரங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரசியல், தொழிற்சங்க ரீதியாக இரண்டு அமைப்புகளும் புரிந்துணர்வுடன் செயற்பட உள்ளதாகவும் மலையகம் தழுவிய அரசியல் கூட்டணி ஒன்றுக்கான அத்திவாரமாக இந்தக் கூட்டிணைவைக் கொள்ள முடியும் எனவும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.










