“அரசாங்கம் தனது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கானதொரு அரசியல் ஆயுதமாகவே 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தைப் பயன்படுத்துகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி, பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் ஹோக்கர்களின் நிதிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை மூடிமறைப்பதற்கே அரசாங்கம் முற்படுகின்றது. 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பின்னணியிலுள்ள முதன்மை நோக்கமும் இதுவேயாகும்.
இதன் காரணமாகவே, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எமக்கு எவ்வித தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலும் கிடையாது; மக்களுக்காகவே நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம். எமது குரல்களை நசுக்க ஆளுந்தரப்பு முற்பட்டாலும், மக்களுக்காக களமிறங்கிப் போராட நாம் தயங்கமாட்டோம்.
அரசாங்கம் எந்தவொரு தேர்தலை நடத்தினாலும், அதனைச் சந்திக்க எமது கட்சி முழுமையான தயார்நிலையிலேயே உள்ளது” என்றார் நாமல் ராஜபக்ச.










