புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன் சென்றடைந்துள்ளார்.
லண்டன் பௌத்த விஹாரையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
முன்னதாக, பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த விசேட உரை, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் தொடர் போராட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கேம்பிரிட்ஜ் யூனியன், “தற்போதைய சூழலில் இருதரப்பு சமநிலையான விவாதத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருந்தது.
கேம்பிரிட்ஜ் நிகழ்வு இரத்தான போதிலும், திட்டமிட்டபடி ஒக்ஸ்போர்ட் யூனியனில் அவர் ஆற்றவிருக்கும் உரையும், லண்டனில் வசிக்கும் இலங்கைச் சமூகத்துடனான சந்திப்புகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமலினுடைய இந்தப் பயணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.
