நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை எனவும், அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. இதனால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்தான் போலி பிரச்சாரங்கள்கூட பரப்பட்டுவருகின்றன என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும். எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவுமில்லை.
அந்த வகையில், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. சட்டத்தை அமுல்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரசாங்கத்தின் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்.” – என்றார் வாசுதேவ நாணயக்கார.
