இம்மாத தொடக்கத்தில் 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நான்கு கைதிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டார்.
ஜூலை 5 – 6 ஆகிய திகதிகளில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சந்தேகநபர்களை சுபுன் மதுசங்க என்ற ‘ஹீனட்டியான சுபுன்’, அஷான் பெர்னாண்டோ என்ற ‘களு மல்லி’, சமீர சம்பத் என்ற ‘பபா’ மற்றும் ஷேன் டிலான் சில்வா என அடையாளம் கண்டுள்ளனர்.
சக கைதிகளாலேயே இந்தச் சந்தேக நபர்கள் அடையாளம் காட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்த சிஐடி அதிகாரிகள், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சம்பவத்தன்று விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 301 துப்பாக்கிகளையும், சிறைச்சாலை அதிகாரிகள் 70 துப்பாக்கிகளையும் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். சிறைச்சாலை ஊழியர்கள், கைதிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் உட்பட 1,395 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணைகளின்போது, ‘மக்களின் போராட்டத்திற்கான பிரஜைகள் அமைப்பு’ மற்றும் உயிரிழந்த கைதியான மொஹமட் நிஸாமின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பெரும்பாலான கைதிகளின் மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினாலேயே ஏற்பட்டுள்ளதாக வாதிட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கோரினார். இரண்டு மாதக் குழந்தை உட்பட ஏழு பிள்ளைகளைக் கொண்ட நிஸாமின் குடும்பத்தின் அவல நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த சிஐடி அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட அனைத்து துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் ஜூலை 14 அன்று அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணையின் ஒரு பகுதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை 28 சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
கைதிகளின் மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகரை இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், நான்கு சந்தேகநபர்களையும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு முன்னர் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
