‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்று கூறும் இந்த அரசில், தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதியும், பௌத்தர்களுக்கு மற்றொரு நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சாணக்கியன்.
நேற்று நாடாளுமன்றத்தில் தொல்பொருள் அமைச்சருக்கு வகுப்பெடுப்பது போல அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:-
“இன்று நான் எழுப்புகின்ற இந்த விடயம் வெறும் ஓர் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. இது வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியலும், அவர்களின் மத உரிமைகளும் தொடர்புடைய மிகக் கடுமையான பிரச்சினையாகும்.
இலங்கையில் தொல்பொருள் திணைக்களமும் சில அரச நிறுவனங்களும் நடைமுறையில் மத ரீதியான பாரபட்சத்துடன் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டை நான் மிகுந்த பொறுப்புடன் இச்சபையில் முன்வைக்கின்றேன்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஆலயத்திற்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் ஒரு வாழை மரத்தைக் கூட நட அனுமதி இல்லை. ஆனால் அதே ஆலயப் பகுதியில், பெரும்பான்மையினருக்குச் சொந்தமான 58 வர்த்தக நிலையங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்தப் போகிறீர்கள்?
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தீக்கிரையான மின்சார மீட்டர் பெட்டியை மாற்றுவதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆலயக் கட்டடத்தை சேதப்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள அரச மரத்தை வெட்ட அனுமதி இல்லை. ஆனால் அதே பகுதியில் புதிய விகாரை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புக் கொள்கையா? அல்லது திட்டமிட்ட தடைசெய்யும் நடவடிக்கையா?
திருகோணமலை குச்சவெளி பகுதியைப் பாருங்கள். 24 கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்நூறுக்கும் குறைவான சிங்கள மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால் அங்கு 38 புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன. அதாவது தலா 10 பேருக்கு ஒரு விகாரை என்ற அளவில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இது இயல்பான தேவையா? அல்லது திட்டமிட்ட மாற்றமா?
முல்லைத்தீவில் குருந்தூர் மலைப்பகுதியில், ஆலயத்திற்குச் சொந்தமான 78 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள?குளத்தில் தமிழர்கள் மீன் பிடிக்க முடியாது, ஆனால் சிங்களவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அங்கே தேங்காய் உடைத்து வழிபடுவதற்கே கூட அனுமதி இல்லை. இது எந்த வகையான சம உரிமை?
வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி மலையில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அரசு சட்டபூர்வமாக்க முயல்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?
மேலும், பலாலி – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த ‘காணிக்கை மாதா’ தேவாலயம் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்திற்கு எதிரான மிகக் கடுமையான செயல் அல்லவா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகளுடன் கூடக் கலந்துரையாட் மறுத்து தன்னிச்சையாகச் செயற்படுகின்றனர். அனைத்து அரச ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுகின்றன. தமிழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ் தெரியாத அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இது நிர்வாக நீதி தானா?
மாண்புமிகு அமைச்சரே, நான் நேரடியாக கேட்கிறேன்.
இந்த நடவடிக்கைகள் எந்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன? உள்ளூர் மக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? ஏன் தமிழ் இந்துக்களுக்கு ஒரு சட்டம், பௌத்தர்களுக்கு இன்னொரு சட்டம்?
இது வெறும் நிலம் பற்றிய பிரச்சினை அல்ல — இது ஒரு மக்களின் மத உரிமை, அடையாளம், மரபு பற்றிய பிரச்சினை.
எனவே, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீண்டும் வழங்குவீர்களா? வழிபாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவீர்களா? அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்துவீர்களா? சட்டவிரோத கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மறுபரிசீலனை செய்வீர்களா? இன மற்றும் மத அடிப்படையிலான அமைப்பு மாற்றங்களை உடனடியாக நிறுத்துவீர்களா?
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்று கூறும் இந்த அரசில், தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதியும், பௌத்தர்களுக்கு மற்றொரு நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? இந்த உயரிய சபைக்கும், எமதுமக்களுக்கும் தெளிவான பதில் தேவை.” – என்றார் சாணக்கியன்.
