Home Blog Page 3961

‘இரத்தினபுரி மாவட்டத்தை புறக்கணித்த மலையக தலைமைகள்’

மலையகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெளியில் தமது சேவைகளை வழங்கிய போதிலும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு இதுவரை எந்தவொரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் இரத்தினபுரி – புதிய நகர் பகுதியில் இன்று (5) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையக மக்களுக்கான தலைவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாமையே இந்த பிரச்சினைக்கான காரணம் எனவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த தலைவர்களின் பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அவர்களினால் கூட இந்த மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மலையக தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கே அனைத்து உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை வழங்கி வருகின்றமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கவனிப்பாரற்று காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தினை முன்னேற்றமடைய செய்ய, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தலைமைத்துவமொன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்வது தற்போதைய நிலையில் அத்தியாவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.

இதுவரை பின்தள்ளப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இனிவரும் காலங்களில் தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து இளைஞர் சக்தியும் ஜீவனுடன் சங்கமம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்காக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்களும் அவருக்கு பேராதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் ஜீவனுக்கான ஆதரவு அலை கோலோச்சியுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பல தரப்பினரும் நேசக்கரம் நீட்டிவருகின்றனர். சர்வமத பிரதிநிதிகள் நேற்று ஆதரவு வழங்கிய நிலையில் இன்று பல இளைஞர்கள் ஜீவனுக்காக அணி திரண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் உள்ள இளைஞர், யுவதிகள், இளைஞர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை பலப்படுத்துவதற்கு ஓரணியில் திரண்டது வரவேற்கத்தக்க விடயம் என்றும், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கு வழிவகுக்கும் என்றும்  சிரேஷ்ட அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜீவனுக்கான ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்ட சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்கள்,

” தேர்தல் காலங்களில் பலர் இனவாதம் பேசி, இளைஞர்களை பிரித்தாள்வதற்கு முயற்சிக்கின்றனர். இம்முறையில் பல அரசியல்வாதிகளின் உரைகள் அவ்வாறே அமைந்துள்ளன. ஆனால், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவ்வாறு அல்ல. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதநேயத்தை நேசித்தவர். நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை வழங்கியவர். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய சர்வமதத் தலைவர்கள், இதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

ஜீவன் தொண்டமானும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி செல்லவே முயற்சிக்கின்றார். அவரிடமும் பிரிவினைவாதம் கிடையாது. இப்படியொரு இளைஞர்தான் தலைமை வகிக்கவேண்டும். அப்போதுதான் இளைஞர் சக்திகளை ஓரணியில் திரட்ட முடியும். அதனை உணர்ந்துள்ளதாலேயே ஜீவனுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்க சுயேட்சையாகவே முன்வந்துள்ளோம்.

மலையகத்தில் நாமும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றம் என்பதற்குள் அனைவரும், அனைத்தும்பெற்று சமமாக வாழும் நிலை உருவாகவேண்டும் என்ற விடயமும் உள்ளடங்கவேண்டும். அதனை ஜீவன் செய்வார் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது.” – என்றனர்.

இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை

பதுளை தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாது செல்வாக்கால் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் பெரும்பான்மையினர்!!

– இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை : தனி விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை பாராளுமன்ற அனுப்புவதில் உறுதியாகவிருக்கும் பதுளை தமிழர்கள் –

பதுளை மாவட்டத்தில் தோட்டப்புறங்களில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்குள்ள அசைக்க முடியாத செல்வாக்கால் அவரின புகைப்படமின்றி தோட்டப்புறங்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையறிந்து பெரும்பான்மை அரசியல்வாதிகள் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் தமது சுவரொட்டிகளில் இணைத்து அச்சிட்டு வருவதை பரவலாக காணமுடிகிறது.

பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளது. அத்துடன், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் தொடர்ந்து செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் இம்முறை வாக்குளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் தமது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு அனைத்து தோட்டப்புறங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டிவருகின்றனர்.

ஆனால், பதுளைவாழ் தமிழர்கள் இம்முறை அதிகூடிய தனி விருப்ப வாக்குகள் மூலம் செந்தில் தொண்டமானை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அரசாங்கத்தில் ஓர் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுப்பதில் உறுதியாகவுள்ளனர். புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதுடன், போலியான பிரசாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாதென கேட்டுக்கொள்கிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் செந்தில் தொண்டமான் 33 வாக்குகளைப் பெற்றிருந்தார். முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சாமர சம்பத் 35 வாக்குளைப் பெற்றிருந்தார். சாமர சம்பத் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 8ஆயிரம் வாக்குகள் தோட்டப்புற வாக்குகளாகும். அந்த வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊவா மாகாண முதலமைச்சராக ஒரு தமிழர் தெரிவாகியிருக்க முடியும். பதுளையில் 80 சதவீதம் பெரும்பான்மையினரும் 20 சதவீதம் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாத செல்வாக்கு காரணமாகவே அனைத்து பெரும்பான்மை அரசியல்வாதிகளும்; இவ்வாறு அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இம்முறை பதுளைவாழ் தமிழ் மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறான போலி சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்களை கண்டு நம்பிவிடாமல் தனி விருப்ப வாக்குளை செந்தில் தொண்டமானுக்கு அளித்து அமைய போகும் அரசாங்கத்தில் மலையகத் தமிழர்களின் உரிமைகளை பேரம் பேசி வென்றெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற வழிசமைக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

‘நல்லாட்சி காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலம்’

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வெறுமனே கைகளை வீசிக்கொண்டு அல்லாமல் மலையகத்துக்கு ஆக்கப்பூர்வமான சேவைகளை செய்துவிட்டே மக்கள் முன்னணிலையில் வாக்குகேட்டு வந்துள்ளோம்.

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலமாகும். 40 ஆண்டுகளுக்குமேல் செய்யப்படாதிருந்த பல விடயங்களைக்கூட நான்கரை வருடங்களில் செய்து செயல்வீரர்கள் என்பதனை தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி அல்ல. அது மலையக மக்களுக்கான கூட்டணி. உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கமாகும். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைக்கூட தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத நிலையிலேயே ஆளுங்கட்சி பக்கமுள்ள இன்றைய மலையக அரசியல்வாதிகள் இருக்கின்றனர் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று நாம் அமைச்சுப்பதவிகளை பெற்ற பின்னர் அபிவிருத்திகள் தொடரும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

நான்கவரை வருடங்களில் எம்மால் பல சேவைகளை செய்யமுடிந்தால் இன்னும் ஐந்தாண்டுகள் கிடைத்தால் எவ்வளவு சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும். எனவே. வாய்ச்சொல் வீரர்களுக்கு அல்லாமல் செயல்வீரர்களுக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நுவரெலியா மாவட்டத்துக்குதான் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்தத்தேர்தலிலும் சில சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் சென்றுவிடுவார்கள். .எனவே, முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கிடைத்த வாக்குரிமையை வீணடிக்கவேண்டும். உரிய வகையில் பயன்படுத்துங்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘நல்லாட்சியால் பாரிய நிலப்பரப்பை இழந்துள்ளோம்’ – மஹிந்த

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை வீரக்கெட்டியவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டையே வேலைத்தளமாக்கி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் கடந்த ஐந்து வருடங்கள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு நடவடிக்கையும் இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்ததாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காலப்பகுதியினுள் துறைமுக நகர ஒப்பந்தத்தை மாற்றியமையினால் எங்கள் நாட்டிற்கு சொந்தமாகவிருந்த நிலப்பரப்பை குறைத்து கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் தயாரித்துள்ளது.
ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தின் மூலம் இழந்த நிலப்பரப்பை மீள பெறுவதற்கு தற்போது எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பிரதேசத்திலும் அபிவிருத்தி மேற்கொள்வதற்காக ஒரே அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை அதிகரித்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எங்கள் அரசாங்கத்தின் கீழ் தங்காலை சிறைச்சாலையை அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனை பிரதமர் இதன் போது நினைவு கூர்ந்தார்.  அதன் மூலம் தற்போது வரையில் அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை இதுவரையில் ஆசியாவின் சிறந்த எடுத்துக்காட்டுடைய சிறைச்சாலையாகியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ.சானக மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இணைந்திருந்தனர்.

‘முற்போக்கு கூட்டணியே இரண்டாவது பெரிய தமிழ்க்கட்சி’

மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்மவர்கள் யானைக்கே வாக்களித்தார்கள். இம்முறை யானை சின்னம் இல்லை. அது காட்டுக்குபோய்விட்டது.எனவே, தொலைபேசிக்கு வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச பிரதமரானால்தான் நாங்கள் அமைச்சராக முடியும். எனவே, முதலில் தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

திகாம்பரம், உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் மலையக மக்களுக்கு கூடுதல் சேவைகளை செய்துள்ளோம். கண்டியில் இருந்து வாக்கு கேட்டுவந்துள்ளனர். மேலும் சிலரும் வருகின்றனர். இவர்களுக்கு வாக்களிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிதான் இலங்கையிலுள்ள இரண்டாது பெரிய தமிழ்க்கட்சியாகும். 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்வசம் இருந்தனர். மூன்று அமைச்சுகள்கூட வழங்கப்பட்டிருந்தன. அவற்றின்மூலம் நாம் சேவைசெய்து காட்டினோம்.

க.கிசாந்தன்

தொண்டமானின் திட்டங்கள் தொடரும் – ரமேஷ்

எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான்,  மலையகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும் அவரின் வேலைத்திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்ரவன் தெரிவித்தார்.

மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கடந்த ஆட்சியின்போது நாம் எதிர்கட்சியிலேயே அமர்ந்திருந்தோம். அதனால் எமது வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன.இருப்பினும் மாகாண அமைச்சில் அதிகாரம் காணப்பட்டமையினால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். அவ்வாறனதொரு அரசாங்கமே பொதுத்தேர்தலின் பின் அமைய உள்ளது.  அதில் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமான் காண நினைத்த அபிவிருத்தியை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

சிவாஜிலிங்கம் கைதாகி விடுதல

இரண்டாம் பதிப்பு : கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்க்ள தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முதல் பதிப்பு : தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் விவரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

பாலித்த தெவரப்பெருமவுடன் சண். பிரபா சங்கமம்!

களுத்துறை மாவட்ட சிறுபாண்மை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளையும் பங்களிப்புகளையும்  வழங்கிவரும் களுத்துறை மாவட்ட வெற்றி வேட்பாளர் பாலித்த தெவரப்பெருமவுடன் கைகோர்த்தார் சண்.பிரபா.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தான் உதவி புரிவதாக பாலித்த தெவரப்பெரும தன்னிடம் உறுதியளிததுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.

நேற்று (04/07) அவரது காரியாலயத்திற்குச் சென்று சந்தித்த வேளையிலேயே தெவரப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபாண்மை மக்களிள் வாக்குகள் மாத்திரம் அலல பெரும்பாண்மை மக்களின் வாக்குகளையும் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவுவேன்.

இத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்திற்கு சிறுபாண்மை பிரதிநிதித்துவத்தை வெற்றிக் கொள்வதற்கு  நிச்சயமாக  உதவுவேன் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தனக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொதுத்தேர்தலில் இருந்து அவர் விலகவேண்டும் – என்று பொதுத்தேர்தலில் சுயேட்சையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நான் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். நான் பணம் வாங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறு மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

அவ்வாறு நிரூபித்தால் பொதுத்தேர்தலில் இருந்து விலகிக்கொள்கின்றேன். இல்லையேல் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து நீங்கள் விலகவேண்டும் என்பதை சவாலாக இன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

0
மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. கல்வி,...

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

0
"அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும...