டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை எதிர்கொண்டிருந்தன.
இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இணையவழி ஊடாகச் சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் தங்களது கொடுப்பனவுகளை நேரடியாக நாட்டின் வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் .
இதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய மாற்று வருமானத்தின் அளவும் அதிகரிக்கும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகள், தாமதங்கள் மற்றும் தொடர்ச்சியான பல முயற்சிகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த முன்னேற்றமானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம், சுயாதீன தொழில் சமூகம் (Freelancer), தகவல் தொழில்நுட்பத் துறை, ஆரம்பக்கட்ட வர்த்தகங்கள் (Startups), சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஈ-வர்த்தகம் (e-commerce) சார்ந்த தொழில்துறைகள் போன்றவற்றுக்கு தனித்துவமான திருப்புமுனையாக அமையும் எனக்கூறலாம்.
இந்த ஒத்துழைப்பின் படி, ஆரம்பகட்டமாக, மக்கள் வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மூலம் PayPal சேவைகள் இந்நாட்டிற்குள் செயல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளும் இதனுடன் இணையவுள்ளன.
1998 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட PayPal நிறுவனம், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளங்களில் ஒன்றாக உள்ளதுடன், இது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 430 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்குச் சேவை வழங்குவதுடன், ஆண்டுதோறும் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறது. இது உலகளாவிய சுயாதீன தொழில் தளங்களிலும், ஈ-வர்த்தக (e-commerce) தளங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான நிகழ்ச்சி நிரலின் முதன்மை நோக்கங்களான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குதல், டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச சந்தையுடனான தொடர்பை வலுப்படுத்துதல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
எல்லைகடந்த கட்டண சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், இந்நாட்டின் சிறு வர்த்தகங்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் தீவிரமாகப் பங்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் விதம் குறித்த மேலதிக விபரங்களை, அந்தந்த வங்கிகள் எதிர்வரும் நாட்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறியப்படுத்தும். அத்துடன், மேலதிக விபரங்கள் தேவைப்படும் நபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள், தாம் கொடுக்கல்-வாங்கல் செய்யும் வங்கியை நேரடியாகத் தொடர்புகொண்டு அது பற்றிய விபரங்களைக் கேட்டறியலாம்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டமானது நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஒரு சிறப்பான அங்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒத்துழைப்பானது நம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என நம்பிக்கை வெளியிட்ட பிரதமர், இது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், தாங்கும் திறனை வளர்ப்பதற்கும் மாத்திரமன்றி, மற்றவர்களைப் பின்பற்றுபவராக மட்டும் இருக்காமல், நமக்கே உரிய தனித்துவமான திறன்களுடன் கூடிய வலுவான மற்றும் நம்பகமான நாடாக பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் நம்மை நிலைநிறுத்துவதற்கும் இது உதவும் எனத் தெரிவித்தார்.










