நோர்வூட் நகரில் பொகவந்தலாவை வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று (06) புதன்கிழமை திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது நோர்வூட் பிரதான நகரில் உள்ள அனைத்துக் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்துக் வர்த்தக நிலையங்களிலும் கருப்புக் கொடிகள் ஏற்றிருந்தனர்.
குறிப்பாக நோர்வூட் நகரில் தற்போது 03 மதுபானசாலைகள் உள்ளதாகவும், மற்றொரு மதுக்கடை திறக்கப்படுவது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்குப் பல பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் மதுபானசாலை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தனியார் வகுப்பு ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபானசாலை திறக்கப்படுவது அந்த வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
புதிய மதுபான உரிமங்களை வழங்கப் போவதில்லை என தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், புதிய மதுபானக் கடைகளைத் திறக்க உரிமங்களை வழங்குவதன் மூலம் தற்போதைய தலைமுறையினரும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் எனவும் மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மக்கள், பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியிடன் வினவிய போது,
தேவையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நோர்டன் பிரிட்ஜில் உள்ள ஒரு மதுபானசாலையினை நோர்வூட் நகரத்திற்கு மாற்றுவதற்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது எனவும், மதுபானசாலை திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.










