பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper ஐ சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக பிரிட்டன் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்பையும் பிரதமர் பாராட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, கொள்கை முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனம் ஆகியன குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , பிரிட்டன் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நகர்வுகள், வலுசக்தித் துறையில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், பிராந்திய தொடர்பாடல் மற்றும் நீண்டகால வலுசக்தி பாதுகாப்பைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் நிமல் சேனாதீர மற்றும் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் சிலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.










