மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வனராஜா தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் வீதியின் ஒரு பகுதி பாரியளவில் தாழிறங்கியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் தாக்கத்தின்போதும் இந்தப் பகுதியில் வீதி பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதைய சீரற்ற காலநிலையால் அதே பகுதியில் மீண்டும் பாரியளவில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனுடன், வீதியின் பல பகுதிகளில் புதிதாக வெடிப்புகள் மற்றும் சிறியளவிலான பிளவுகள் ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நோர்வூட் எண்ணை நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, மண்ணுக்குள் நீர் தேங்கி, வீதியின் கீழ்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த தாழிறக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடருமானால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி தாழிறக்கம் மேலும் அதிகரிப்பதுடன், புதிதாக பல இடங்களிலும் வீதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதி, மஸ்கெலியா, நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதையாக காணப்படுவதால், வீதியில் ஏற்படும் இவ்வாறான பாதிப்புகள் அன்றாட போக்குவரத்துக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, வீதி மேலும் தாழிறங்குவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில், வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், குறிப்பாக வீதியில் புதிதாக ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் தாழிறங்கிய பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை செலுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்துகின்றனர்.
மலைவாஞ்ஞன்










