“எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, நகைச்சுவை அரசியல் செய்யாமல், குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பணியையாவது சஜித் பிரேமதாச சரியாக முன்னெடுக்க வேண்டும்” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவையாவன:
“தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது; ஏனெனில் இது மக்களின் அரசாங்கமாகும்.
எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களிலேயே பலர் அதற்கு வாக்களிக்கவில்லை.
எனவே, அரசாங்கத்தைக் குறை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் பணியைச் சஜித் முன்னெடுக்க வேண்டும். அதுவே அவரின் அரசியல் இருப்புக்கு நல்லது” என்றார்.










