வாக்கு வேட்டைக்காக தேர்தல் காலத்தில் மட்டும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசாமல், தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்தார்.
பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஆரம்பத்தி கத்தியால் நூறு தேயிலை செடிகளை கவ்வாத்து வெட்டியவர்கள் தற்போது இயந்திரத்தால் ஆயிரம் செடிகளை வெட்டுகின்றனர்.ஆரம்பத்தில் மருந்து கொள்கலனால் நூறு தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளித்தவர்கள் தற்போது ஆயிரம் தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளிக்கின்றனர்.
நாளுக்கு நாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் அளவு கூடிவிட்டது.ஆனால் சம்பளம் கூடவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரச்சனை இல்லை ஆயிரம் பிரச்சனைகள் வேலைக்கேற்ற ஊதியத்தை கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க நேரிடும்.
எனவே ஆயிரம் ரூபாயில் அரசியல் செய்வதை விடுத்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற முயற்சி செய்யுங்கள்.” – என்றார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்