தாய்லாந்திற்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026 செப்டம்பர் 15 முதல், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்கு (Visa Exemption) திட்டத்தின் கீழ் பயணம் செய்ய முடியாது. புதிய விசா நடைமுறைகள் அமுலுக்கு வந்ததும், தாய்லாந்து செல்லும் இலங்கையர்கள் பயணத்திற்கு முன்னதாக பொருத்தமான விசாவைப் பெற்றிருக்க வேண்டும்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் தகவலின்படி, திருத்தப்பட்ட Visa Exemption மற்றும் Visa on Arrival திட்டங்கள் 2026 ஆகஸ்ட் 31 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 15 முதல் அமுலுக்கு வருகின்றன.
தாய்லாந்தில் நடைமுறையில் இருந்த 60 நாள் விசா விலக்கு திட்டம் நீக்கப்படுவதுடன், விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலும் மாற்றப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதார நலன்கள், நாடுகளுக்கிடையிலான பரஸ்பர சலுகைகள் மற்றும் e-Visa வசதி உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 15 அல்லது அதற்குப் பின்னர் தாய்லாந்து செல்லும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணத்திற்கு முன்பாக விசா பெற வேண்டும்.
விசா விண்ணப்பங்களை தாய்லாந்தின் e-Visa இணைய முறைமை ஊடாக ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும். கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் நேரடியாக விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது என்றும், விண்ணப்பம் மற்றும் அதற்கான கட்டணம் ஒன்லைனிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், செப்டம்பர் 15க்கு முன்னர் தற்போதைய Visa Exemption திட்டத்தின் கீழ் தாய்லாந்திற்குள் நுழையும் இலங்கையர்கள், அவர்களுக்கு குடிவரவு அதிகாரிகளால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் தங்கும் காலம் முடியும் வரை நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.










