தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.
இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-
‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ – மேற்சொன்ன தலைப்பில் தங்களது கடந்த 2026.03.02 திகதியிட்ட கடிதமும் 02.03.2026 அன்றும் 09.04.2026 அன்றும் நடைபெற்ற கூட்டங்கள் சம்பந்தமாகவும் அக்கூட்டத்தில் எய்தப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாகவும் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டி இக்கடிதத்தை மிகவும் மனவருத்தத்துடன் எழுதுகின்றோம்.
தங்களின் மேற்படி முயற்சியை நாம் எதுவித தயக்கமும் இன்றி உடனடியாகவே வரவேற்றமை மட்டுமல்லாமல் எமது கட்சியின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும் நல்கினோம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த ஒத்துழைப்புக் காரணமாக ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து அரசாங்கத்தோடு அரசியல் தீர்வு சம்பந்தமாக எதுவிதமான இடைவினையும் கொள்ளமாட்டாது என்ற வாக்குறுதியையும் நாம் வழங்கியிருந்தோம். வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான (ஒரே) கட்சியாக நாம் இருந்தபோதும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதியை நாம் வழங்கியிருந்தோம்.
ஆனால் நேற்று தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை, மேற்சொன்ன இணக்கப்பாட்டை முற்று முழுதாக மீறுகின்றதாக இருப்பதை தாங்களும் அவதானித்திருப்பீர்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
தாங்கள் நியமித்த நிபுணர் குழுவின் அமர்வுகள் ஆரம்பமாக இருக்கும் இத்தறுவாயில் அவர்கள் ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும் ஒரு குழுவை அமைத்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கான முயற்சியை வேண்டுமென்றே தகர்த்திருக்கின்றார்கள்.
அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 15.02.2026 அன்று நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டமும் இதே மாதிரியான முறையில் ஒற்றுமையான செயற்பாட்டை குழப்புவதற்காகவே நடத்தப்பட்டது என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
19.02.2026 அன்று சுவிற்சலாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ‘மூடிய அறை’ கூட்டத்துக்கு இணங்கிய பின் பகிரங்கக் கூட்டத்தை நடத்தி அந்த ஒற்றுமைக்கான முயற்சியை அவர்கள் ஏற்கனவே தகர்த்திருந்தனர். அதே பாணியில் தங்களது முயற்சியையும் இப்போது முறியடித்துள்ளனர்.
நாம் ஒற்றுமையாகச் செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்பதில் எவருக்கும் எந்தச் சந்தேகமும் எழாத வண்ணமே இதுவரை நாம் செயற்பட்டு வந்துள்ளோம். நிபுணர்களோடு செயற்படுவதற்கு கூடுதலான எண்ணிக்கையை அவர்கள் கடந்த கூட்டத்தில் கோரிய வேளையிலும் எமது இடங்களையும் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க நாம் தயாராக இருந்தோம் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இப்படியாகத் தனித்துச் செயற்படுகிற பின்ணணியில் விரக்தியளிக்கும் விதத்தில் தங்களது முயற்சியைத் தொடர்வதினூடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகள் ஏதேனும் எட்டப்பட முடியுமாயிருக்குமா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்துமாறு மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.
