மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இதற்கு உறுதுணையாகவுள்ள செங்கோட்டையன் தொடர்பிலும் கூற வேண்டும்.
செங்கோட்டையன் 2018ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்த்தகங்களை வழங்கியிருந்தார்.
கண்டியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தார்.
விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் போது நாங்கள் தொடர்ந்தும் இவர்களுடன் உறவுகளை வைத்துக்கொண்டு, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
இதனால் விஜய்க்கும் செங்கோட்டையனுக்கும் எமது நன்றியை கூறிக்கொள்கின்றோம்.
இதேவேளை,பெருந்தோட்ட பகுதியில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்பட்ட எவ்வித உதவியும் போய் சேரவில்லை. ஜனாதிபதி 13ஆம் திகதி நுவரெலியாவுக்கு வந்து இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார்.
தோட்டப் பகுதிகளில் காணிகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலால் அதனை கொடுக்க முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். எவ்வாறாயினும் தோட்டப்பகுதி மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது.
இதன்படி காணி உரிமையை பெற்றுக்கொண்டால் இது தானாக வந்து சேரும்.
இதேவேளை அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே பல்வேறு இடங்களில் தோட்ட துரைமார்கள் தொழிலாளர்களை தாக்குகின்றனர்.
அண்மையில் நீலகாமத்தில் சம்பவமொன்று நடந்தது. தோட்டத்தில் குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்துடன் மொக்கா தோட்டத்திலும் தொழிலாளியொருவர் தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று டெல்மார்க் தோட்டத்திலும் உதவி முகாமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.உங்களுக்கு அதிகமாக வாக்களித்த பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.’ என்றார்.










