தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டா ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
“2025 டிசம்பர் மாதம் நாடு வீழ்ச்சியடையும் என எதிரணிகள் கூறின. அதன்பின்னர் மார்ச் மாதம் என பிரச்சாரம் முன்னெடுத்தன. இவ்வாறு மாதங்களைக் கூறிக்கொண்டு எதிரணி உறுப்பினர்கள் அரசியல் நடத்துகின்றனர்.
தமக்கு எஞ்சியுள்ள கட்சி ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவுமே நாடு விழும், அரசு விழும் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன.
திருடர்களைப் பிடிப்போம், ஊழல்களை இல்லாமல் ஆக்குவோம் , நிவாரணம் வழங்குவோம் என்றெல்லாம் அவர்களால் கூறமுடியாது. அதனால்தான் பொருளாதார வீழ்ச்சிப் பற்றி மாதங்களைக்கூறி நாட்கள் கடத்தப்படுகின்றது.
இதுதான் அவர்களில் அரசியல், அதற்கு வழிவிடுவோம். அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.










