மழை தொடரும்

நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனியுடனான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது திசைமாறி வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வரை காணப்படும்.

கடல் சாதாரண நிலையில் இருந்து ஓரளவுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும். எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Latest Articles