“வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசாங்கம் இதனை ஒரு சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கை எனக்கூறி நியாயப்படுத்த முயல்கின்றது.
வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஆளுங்கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதத் தவறும் நடக்கவில்லை எனக் கூறி அரசாங்கத்தைப் பாதுகாத்தனர். ஆனால், அன்று நாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள் இன்று மக்கள் முன்னிலையில் நிரூபணமாகியுள்ளன.
நிலக்கரி கொள்வனவு நடைமுறையில் பாரிய முறைகேடுகள் காணப்படுவதாகத் தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஊழலை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த இரண்டு வருடங்களாகப் பழைய ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது இவர்களது முதலாவது நிலக்கரி டெண்டர் சர்ச்சைக்குள்ளானதும், 2009 ஆம் ஆண்டு முதல் விசாரிக்க வேண்டும் எனக் கூறுவது முறையற்றது.” – என்றார்.
நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயாராக இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “தாம் தலைமைத்துவத்திற்குத் தகுதியானவர் என்று கூறுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள எவருக்கும் உரிமை உண்டு. எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு என ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது. இறுதியில் யார் தகுதியானவர் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அரசாங்கம் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை விடுத்து, வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று லசந்த அழகியவண்ண இதன்போது வலியுறுத்தினார்.










