அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமை மீண்டும் நேரடி போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஈரானில் திருமண நிகழ்வு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாஷிங்டன் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) வான் பாதுகாப்பு மையங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை சொத்துக்கள், சுரங்கம் தோண்டும் திறன்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள பல பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுமதியின்றி இந்த குறுகிய நீர்வழியைக் கடக்க முயலும் எண்ணெய் தாங்கிப் படகுகளுக்கு ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஜோர்டான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் பஹ்ரைன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதாக IRGC தெரிவித்த போதிலும், ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின்படி எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று இரு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஜோர்டானிய வான்வெளிக்குள் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளதாகவும், அவற்றில் 10 ஏவுகணைகள் அழிக்கப்பட்ட நிலையில் 3 ஏவுகணைகள் தொலைதூரப் பகுதிகளில் விழுந்ததாகவும் ஜோர்டான் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
ஈரானிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. அதேவேளை, வட ஈராக்கில் உள்ள எர்பிலில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தனது தரைப்படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் பல அமெரிக்க பணியாளர்கள் கொல்லப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
இருப்பினும், ஈராக்கோ அல்லது அமெரிக்காவோ இந்த தாக்குதலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது தீவிரமான நேரடி மோதல் இதுவாகும். இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப ஆர்வம் காட்டாத ஒரு காலகட்டம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
திருமண நிகழ்வில் 5 பேர் பலி
இப்போரின் மிக மோசமான பொதுமக்கள் உயிரிழப்புகளில் ஒன்றாக, ஹோர்முஸ் நீரிணையின் கடலோரப் பகுதியான சிரிக் என்ற இடத்திற்கு அருகில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயமடைந்ததாக ஈரானிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 4 வயது சிறுவனும் அடங்குவதாக மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண அதிகாரியை மேற்கோள் காட்டி ஐஆர்என்ஏ (IRNA) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
“போரின் முதல் நாளில் மினாப்பில் உள்ள பெண்கள் பள்ளியில் 160 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு உட்பட, இதற்கு முன் நடந்த கொடூரங்களின் தொடர்ச்சியிலிருந்து இந்தக் கொடூரத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மினாப் தாக்குதல் குறித்து பென்டகன் இன்னும் உத்தியோகபூர்வ முடிவை வெளியிடவில்லை என்றாலும், அமெரிக்கா பழமையான இலக்குத் தரவுகளைப் பயன்படுத்தியதன் விளைவாக இது நடந்திருக்கலாம் என விவகாரத்தை அறிந்த இரண்டு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.
ஈரான் இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என ஈரானிய வெளியுறவு அமைச்சக அறிக்கை உறுதியளித்துள்ளது.
“இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு முன்னால் அமைதியாக இருக்கும் அல்லது இத்தகைய செயல்களை நியாயப்படுத்த முயலும் அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும், தங்களின் அமைதி நடுநிலைமை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அமைதியாக இருப்பவர்கள் நாளை இதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது” என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
