பாதாள குழு உறுப்பினர் ‘கெம்பா’ கைது

திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி, மின்சார நிலைய வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இக்குழுவின் முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ என்பவரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மற்றைய இரு சந்தேக நபர்களிடமிருந்தும் முறையே 8 கிராம் மற்றும் 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றக் கும்பலுக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளும், பலரை மிரட்டிப் பணம் பறித்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிரான முந்தைய குற்றச்செயல்கள் தொடர்பிலும், போதைப்பொருள் சட்டத்தின் 54ஆம் பிரிவின் கீழ் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles