ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார் என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரான் தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியது.
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமானால், முதலில், ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்பதற்கும், போர் முழுமையாக நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பின்னரே, அணுசக்தி விவகாரம் குறித்து ஈரான் விவாதிக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானின் இந்த நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
3 கட்ட நிபந்தனைகள் என்னென்ன?
1) ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்பதற்கும், போர் முழுமையாக நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
2) முதற்கட்ட நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே, சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும்.
3) மேற்கண்ட இரு நிலைகளும் வெற்றிகரமாகக் கடந்த பின்னரே, அணுசக்தி விவகாரம் குறித்து ஈரான் விவாதிக்கும். ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கை இதில் அடங்கும்.










