ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்த அரசு பின்வாங்குவது ஏன்?

தென்னிலங்கையில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும், இந்நாட்டின் பிரஜைகளுக்குரிய கௌரவம் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுவதும் திட்டமிட்ட இன அழிப்பாகும் என சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென்னிலங்கையில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள், தொழிலுரிமை மற்றும் வாழ்வுரிமையின்றி கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவகாரம், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அதனை ஆய்வுக்கு உட்படுத்தி சர்வதேச மயப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.

எனினும், இவ்விடயம் அம்மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்லும் அப்பிரதேச அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரிந்ததே. இந்த மக்கள் உரிமையற்றவர்களாக, சுதந்திரமற்றவர்களாகச் சிங்கள மக்களிடையே கரைந்துபோக வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனையின் காரணமாகவே இவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர். இது வெறும் இன அழிப்பு மட்டுமல்ல, ஒரு வகையான ‘இனப்படுகொலை’ என்றே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மலையக அரசியல்வாதிகளின் மௌனம்

தென்னிலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலை மலையகத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரிந்ததே. ஆனால், அவர்கள் பேரினவாதத் தேசியக் கட்சிகளுக்குள் மறைந்து நின்று அரசியல் செய்வதால், அந்த அரசியலுக்குள் அவர்களும் கொத்தடிமைகளாக மாறித் தமது மக்கள் குறித்துப் பேச முடியாமல் மௌனிகளாகி உள்ளனர். அல்லது இது குறித்துப் பேசினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற பயமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அரசின் போலி வாக்குறுதிகளும் நில ஆக்கிரமிப்பும் தற்போதைய ஆட்சியாளர்களும் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்காக ‘அட்டன் பிரகடனத்தில்’ மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முற்றிலும் மறந்துவிட்டனர். மலையக மக்களுக்கு வழங்கப் போதிய நிலமில்லை என்று கூறுவதும், அவர்களுக்குத் தொடர்மாடி வீடுகளைக் கட்டப்போவதாகக் கூறுவதும், அவர்களை நிலமற்றவர்களாகப் பெருந்தோட்டங்களுக்குள் முடக்கி அடிமைகளாக வைத்திருக்கும் பேரினவாத உள்நோக்கமே ஆகும்.

அதேநேரம், அரசின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் உள்ள பயன்படுத்தப்படாத மற்றும் கைவிடப்பட்ட காணிகளைப் பெரும் முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. மலையகத் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் பின்வாங்குவது, பேரினவாத இன அழிப்புச் சிந்தனையின் வெளிப்பாடே என்பது எமது உறுதியான நிலைப்பாடாகும்.

பயத்தின் நிழலில் வாழும் மக்கள்

தென்னிலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான அடிப்படைத் தேவைகளைக் கேட்கவோ, கூட்டாகக் குரல் எழுப்பவோ முடியாதபடி அடிமைகளாக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மைச் சமூகத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். வெளியில் தெரியாத வகையில் தாம் தாக்கப்படலாம் என்ற பயத்திலேயே அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

கூட்டு அரசியல் செயல்பாட்டிற்கான அழைப்பு
தற்போது வெளியாகியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வறிக்கை தொடர்பாக அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது? இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்துப் பிரதேசத் தமிழர்களும் கடந்த காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் பல்வேறு வடிவங்களில் இன அழிப்புக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, இக்காலகட்டத்தில் கூட்டு அரசியல் செயல்பாடே மிக முக்கியத் தேவையாகும். இதற்கு மலையகத் தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக முன்வர வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles