118 இலக்கை அடைவாரா விஜய்? பரபரப்பாகிறது தமிழக அரசியல் களம்!

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது. மறுபுறத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை கையளித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

எனினும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார்.

இதன்போது சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார்.

ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆளுநர் அர்லேகர், ”ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது” என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆளுநர் இழுத்தடிப்பு செய்வதால், இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கு தவெக தலைவர் விஜய் தயாராகிவருகின்றார்.

Related Articles

Latest Articles