உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் கால்பந்து அணி தாயகம் திரும்பியுள்ளது. மாட்ரிட் நகரின் வீதிகளில் திரண்டிருந்த சுமார் 20 லட்சம் மக்கள், வெற்றி பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அடுத்த நாள், 26 வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சிப் பணியாளர்கள் அடங்கிய குழு ஸ்பெயின் தலைநகரை வந்தடைந்தது. திங்கள்கிழமை அன்று அவர்கள் நாட்டின் அரச குடும்பத்தினரையும், பிரதமர் பெட்ரோ சான்செஸையும் (Pedro Sanchez) சந்தித்தனர்.
“வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் விளையாட்டு பாணி, உழைப்பு மற்றும் வெற்றிக்கு எனது நன்றிகள். நீங்கள் விளையாடியதை நாங்கள் மிகவும் ரசித்துப்பார்த்தோம்,” என்று பிரதமர் சான்செஸ் கூறினார்.
அதன்பின்னர், வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஏறி மத்திய மாட்ரிட் வீதிகள் வழியாக உற்சாகப் ஊர்வலம் சென்றனர். வீரர்களின் புகைப்படங்கள் தாங்கிய அந்தப் பேருந்தில் “நட்சத்திரங்கள் ஒன்றாகப் பிரகாசிக்கின்றன” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
வீரர்கள் உலகக் கோப்பை கோப்பையைக் கையில் ஏந்தியவாறு, “சோமோஸ் கேம்பியோன்ஸ்” (“நாங்கள் சாம்பியன்கள்”) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஊர்வலப் பாதை நெடுகிலும் ரசிகர்களுடன் நடனமாடியும் உரையாடியும் மகிழ்ந்தனர்.
“இவ்வளவு ஆர்வம் கொண்ட, அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் வாழும் ஒரு அற்புதமான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பெருமையான அனுபவமாகும். நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறோம்,” என்று ஊர்வலம் தொடங்குவதற்கு முன் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டே (Luis de la Fuente) தெரிவித்தார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மோன்க்லோவா அரண்மனைக்கு (Moncloa Palace) அருகில் இருந்து, மாட்ரிட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் சிபெலெஸ் சதுக்கத்தை (Cibeles Square) அடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவில் சுமார் 1,20,000 மக்கள் கலந்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
35 டிகிரி செல்சியஸ் (95 ஃபாரன்ஹீட்) வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குடைகளுடன் வந்த ரசிகர்கள் குழுக்கள், அணியினரின் வருகைக்கு முன்னதாகவே திங்கள்கிழமை காலை சிபெலெஸ் சதுக்கத்தின் அருகே தங்களது இடங்களைப் பிடிக்கத் தொடங்கின.
இந்தச் சதுக்கம்தான் முந்தைய ஸ்பெயின் அணிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வெற்றிகளைக் கொண்டாடக் கூடும் வழக்கமான இடமாகும். மேலும், ரியல் மாட்ரிட் (Real Madrid) கால்பந்து அணி பட்டங்களை வெல்லும்போது கொண்டாடும் பாரம்பரியமான இடமும் இதுவே ஆகும்.
சிபெலெஸ் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் பாடகர்களான ஐதானா (Aitana), அனா மெனா (Ana Mena) மற்றும் லோலா இண்டிகோ (Lola Índigo) ஆகியோர் திரண்டிருந்த மக்களைத் தங்களது இசையால் மகிழ்வித்தனர்.
மாட்ரிட்டில் அணியினரை வரவேற்க சுமார் 18 லட்சம் மக்கள் திரண்டிருந்ததாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் ஃபெரான் டோரஸ் (Ferran Torres) வெற்றி கோலை அடிக்க, ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் 2010-இல் தென்னாப்பிரிக்காவில் வென்றதற்குப் பிறகு, ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை உறுதி செய்துள்ளது.
இத்தொடரை இணைந்து நடத்திய மூன்று நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ அதிபர் கிளார்டியா ஷீன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ஸ்பெயின் அணிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இறுதிப்போட்டியின் முடிவை அறிவிக்கும் கடைசி விசில் ஊதப்பட்டதும், மாட்ரிட் நகரம் கொண்டாட்டங்களில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஸ்பானிஷ் கொடிகளை ஏந்தியும், அணியின் வண்ண ஆடைகளை அணிந்தும் உணவகங்கள் மற்றும் பார்களில் இருந்து வீதிகளுக்குப் பொங்கி வந்தனர்.
தலைநகரின் புவேர்ட்டா டெல் சோல் (Puerta del Sol) மற்றும் பிற முக்கிய சதுக்கங்களில் திரண்டிருந்த மக்கள் பாடியும், ஆடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்; வாகனங்களின் ஹாரன் சத்தங்களும் முழங்கின.
பலர் ஞாயிற்றுக்கிழமை வெற்றியை திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்துக் கொண்டாடினர்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மூன்று அல்லது நான்கு மணி நேரமே தூங்கினேன், ஆனால் இந்த அணிக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்,” என்று 19 வயதான விக்டர் அல்வாரெஸ் கூறினார்.
ஆண்கள் அணியின் இந்த வெற்றியின் மூலம், 2023-இல் பெண்கள் உலகக் கோப்பையையும் வென்றிருந்த ஸ்பெயின், ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களையும் தன்வசம் வைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெறுகிறது.
“உண்மையிலேயே இது மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. நாங்கள் பார்களுக்கோ வேறு எங்கோ செல்லாமல், வீட்டில் கவனமாக, மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இத அனுபவிக்க விரும்பினோம்,” என்று 59 வயதான அரசு ஊழியர் ஜெமா ரோடெரோ கூறினார்.
இருப்பினும், மாட்ரிட்டிற்கு வடமேற்கே உள்ள சலாமன்காவில், வெற்றியைக் கொண்டாடத் தனது நண்பர்களுடன் ஏறிய நீர்வீழ்ச்சி வடிவிலான நீரூற்று (Fountain) இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த சம்பவம், கொண்டாட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.










