தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடும் வறட்சி: கன மழை எச்சரிக்கை!

எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அதன் உச்சக்கட்டம் இலங்கையில் முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடவும் விரைவாக ஏற்படக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி எச்சரித்துள்ளார்.

இலங்கையில் எல் நினோவின் சாத்தியமான தாக்கங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர், இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வறட்சியான வானிலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும், அதேவேளை அக்டோபர், நவெம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல் நினோ என்பது ஒரு உலகளாவிய காலநிலையாகும், இது இலங்கைக்கு மட்டும் உட்பட்டது அல்ல என்று சுட்டிக்காட்டிய கலாநிதி படபெந்தி, இதன் மூலம் ஏற்படக்கூடிய தாக்கங்களை எதிர்கொள்வதற்காக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மாறிவரும் வானிலை முறைகள் காரணமாக இலங்கை கடுமையான வறட்சியை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரித்த அவர், இந்த சூழ்நிலையை நிர்வகிப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், தீவிர வெப்பம் மற்றும் வறட்சி நிலைமைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதுடன், பாதிப்புக்குள்ளாகக்கூடிய துறைகளில் வேலை இழப்புகள் உட்பட பல்வேறு சவால்களையும் உருவாக்கக்கூடும் என்பதால், நீர் மற்றும் மின்சாரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles