யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

யாழில் பொலிஸாரைக் கண்டதும்
ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

– உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, பொலிஸாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது கையில் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை வாய்க்குள் போட்டுத் திடீரென விழுங்கியுள்ளார்.

இளைஞனின் இச்செயலை அவதானித்த பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு அவரிடமிருந்த மற்றொரு போதைப்பொருள் பொட்டலத்தைக் கைப்பற்றினர். அதேவேளை, போதைப்பொருளை விழுங்கிய இளைஞரின் உடல்நிலை பாதிக்கப்படலாம் எனக் கருதிய பொலிஸார், அவரைத் துரிதமாகக் கைது செய்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

தற்போது அந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக, மேற்படி இளைஞரிடம் போதைப்பொருளை வாங்கியவர்கள் மற்றும் அவருக்கு போதைப்பொருளை விநியோகித்த பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles