மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தம் அடங்கிய பிரேரணை இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கும் உரிய வகையில் நிறைவேறிய பின்னர் ஆகஸ்ட் மாதமளவில் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
சுமார் 3 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.
இதன்படி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துள்ளார்.கட்சி தலைவர்களுடனும் இது சம்பந்தமாக அவர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.