இதொகாவின் ரூ. 1,700 சம்பள உயர்வு முன்மொழிவு காட்டிக்கொடுப்பாகும்

“ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிகின்ற தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வு என்பது காட்டிக்கொடுப்பாகும்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட துண்டுபிரசுர விநியோகத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நிலவுகின்ற இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியில் நாடும், நாட்டு மக்களும் பாதிப்படைந்திருக்கின்ற வேளையில், இதில் மிகவும் பாதிப்படைந்துள்ளவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அதனால், தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து நாங்கள் துண்டுபிரசுர விநியோகத்தை மேற்கொண்டோம்.

குறிப்பாக, கூட்டு உடன்படிக்கையில் இருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பொறுப்பு சம்பள நிர்ணயச் சபையிடம் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பள நிர்ணயச் சபையை நிர்வகிப்பது அரசாங்கமாகும். அதற்குப் பொறுப்பானவர் தொழில் அமைச்சர் ஆவார். அதனால் அரசாங்கத்திடம் இருக்கும் மிக முக்கியமான கடப்பாடுதான் சம்பள நிர்ணயச் சபையை உடனடியாகக் கூட்டி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பொருட்டு கடந்த நாட்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் 1700 ரூபாவாக சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். எனவே, ஜனாதிபதியின் கருத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்தும் ஒரே மாதிரியாகவிருக்கிறது. ஆகவே, இந்தக் கருத்து செல்லுபடியாகாது.

தற்போது வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்ற நிலையில் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் நியாயமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அக்கறை காட்டவேண்டும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு ஒரு இலட்சத்து நான்காயிரமாக அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் மாதச் செலவு ஏறக்குறைய ஒரு இலட்சம் ரூபாவை அண்மிக்கிறது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles