” இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டினாலும், அவர்களை கைது செய்யவேண்டுமேதவிர, துப்பாக்கிச்சூடு நடத்த முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது பாரதூரமான விடயமாகும்.” என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
” இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர், தற்செயலாக துப்பாக்கி இயங்கியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என கடற்படை கூறியுள்ளது. இவ்விடயத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் தாக்கம் ஏற்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வாசு இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஆம், இது தொடர்பில் இந்திய தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தி நட்புறவை கட்டியெழுப்ப முடியாது. துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், அதற்கான காரணங்களை உரிய வகையில் முன்வைத்தால் இப்படியான விமர்சனங்கள் வராது.
இந்திய மீனவர்கள் துப்பாக்கியை பறிக்க முற்பட்டனர் என கடற்படை தளபதி கூறியுள்ளார். இதனை நம்பும் வகையில் விடயங்களை முன்வைக்க வேண்டும்.
கடற்றொழிலுக்காக வருபவர்கள் எல்லைமீறி இருந்தால் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து துப்பாக்கிச்சூடு நடத்துவது பாரதூரமான விடயமாகும். கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.” – என்றார்.
