இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டியது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 144- ஆக உள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை தாண்டியிருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,771- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 827- ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 209- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 894- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 82 ஆயிரத்து 204- ஆக உள்ளது.










