ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி ஆசிரியையொருவர் உட்பட மூன்று பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்காட்டுக்களின் பேரில், பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ( இன்று 15-10-2022) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல விடம் வினவியபோது, குறிப்பிட்ட ஆசிரியையை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், எம் மட்டத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுறினார்.
பதுளைப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியையொருவரும், இரு பெண்களும் இணைந்து , தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக்கூறியே மேற்படி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகும்.
தொழில் தரங்களுக்கமைய இரண்டு இலட்சங்களிலிருந்து ஆறு இலட்சம் ரூபாவரை பணம் பெறப்பட்டன.
இவ்வகையில் பணம் பெறப்பட்டதும் அரச இலச்சினை பொறிக்கப்பட்டவகையில் தொழில் நியமனப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட ஆசிரியையினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளினால் நியமனங்கள் வழங்குவதற்று காலதாமதமாகலாமென்று தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்களும் செய்யப்பட்டுள்ளதென்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.
வழங்கப்பட்டிருக்கும் தொழில் நியமனப்பத்திரங்களும் போலியானவைகளென்று பொலிசார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாவிருந்தே, மேற்படி மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பணம்கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர் , யுவதிகள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை உள்ளிட்ட மூவரின் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று , விசாரணைகளை மேற்கொண்டு வரும் பிரதேச பொலிஸ் அதிபர் எஸ் கலனசூரிய தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை
