” எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது என வங்குரோத்தடைய அரசியல்வாதிகள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எட்கா தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவும் இல்லை.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், எட்கா ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுகளை தொடரவே இணக்கம் தெரிவிக்கப்பட்டது எனவும், மாறாக அவ்வொப்பந்தத்தில் கைச்சாதிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமுலில் உள்ளது. அதனை புதுப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
” எட்கா உடன்படிக்கை தொடர்பில் நீண்டகாலமாக பேச்சுகள் உள்ளன. இந்தப் பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எட்காவை கைச்சாத்திட்டுவிட்டதாக சில அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.
எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையிலும் நாம் கைச்சாத்திட மாட்டோம். இருநாடுகளுக்கும் சாதகமான உடன்படிக்கைகளையே நாம் முன்மொழிகிறோம். எட்கா உடன்படிக்கையில் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகிறது. எட்கா தொடர்பில் எந்தவொரு இறுதி இணக்கப்பாடும் இல்லை. அடுத்தகட்ட பேச்சுகள் குறித்தும் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.”










