” எனது மகன் ராகுல் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும். அதனை என்னால் தடுக்க முடியாது. நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவரவேண்டுமென்றில்லை. அவர் வேறுகட்சியில்கூட வரலாம். அதை நான் முடியு செய்ய முடியாது.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
வட்டகொடை, மடம்குப்புர பகுதியில் அண்மையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டி தொடரின் பரிசளிப்பு விழாவில் திகாம்பரத்தின் மகன் ராகுல் திகாம்பரமும் பங்கேற்றிருந்தார்.
இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் வெளியாகின. ‘வாரிசு’ அரசியல் என்ற கோணத்திலும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ‘சூரியன்’ வானொலியில் நேற்று சனிக்கிழமை ஒலிபரப்பாகிய விழுதுகள் அரசியல் நேர்காணலின்போது, சிரேஷ்ட ஊடகவியலாளர் இந்திரஜித்தால், இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்,
” அரசியல் வாரிசு என்றெல்லாம் இல்லை. எனது மகன் ராகுல் தற்போது கல்வி பயில்கின்றார். இளைஞர்கள்தான் அவரை நிகழ்வுக்கு அழைத்துள்ளனர். ” அப்பா நானும் வருகின்றேன்.” என அவர் என்னிடம் கூறினார். நானும் அழைத்துச்சென்றேன்.
இது தொடர்பில் கண், காது, மூக்கு என எல்லாம் வைத்து கதைகள் பரப்பட்டன. அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும். நான் அவரை தடுக்க முடியாது. ஆனால் நான்தான் கொண்டுவர வேண்டுமென்றில்லை. அவர் வேறு எந்த கட்சியில்கூட கேட்கலாம். அதை நான் முடிவு செய்ய முடியாது.
தொழிலாளர் தேசிய சங்கத்தில் நிறைய இளைஞர்களை வளர்த்து வைத்துள்ளேன். அதனால்தான் இன்னும் என்னுடன் உள்ளனர். நான் எனது குடும்பத்துக்கு ‘சப்போட்’ பண்ணுவது கிடையாது.
எனது உறவினர் சிங் பொன்னையா (மாமா) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வந்தவர். அங்கிருந்து வந்ததால்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னுடைய அண்ணனின் மனைவி தேர்தலில் போட்டியிட்டார். அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்தால்கூட அவர்களுக்கு முதலிடம் கிடையாது. கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும். இதனால்தான் எமது கட்சி வளர்ந்துள்ளது.” – என்றார்.










