ஐஸ், கஞ்சாவுடன் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது!

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய கினிகத்தேன பிளாக்வாட்டர் பகுதியில் குறித்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதன்போது ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு கஞ்சா பொட்டலமும், பின் இருக்கையில் பயணித்த சந்தேக நபரிடம் 14 கஞ்சா பொட்டலங்களும், 01 ஐஸ் போதைப்பொருள் பொட்டலமும் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபர்களைக் கைது செய்து விசாரித்தபோது, 15 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 14,630 மில்லிகிராம் கஞ்சா அவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் வாங்கிய கடத்தல்காரர் பற்றிய தகவல்களைப் பெற்று, வட்டவளை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தபோது சந்தேக நபரைக் கைது செய்தனர்.

வீட்டை சோதனையிட்டபோது, விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 6,190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 70 பொட்டலங்களை வீட்டில் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 20-25 வயதுக்குட்பட்டவர்கள், மேலும் கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் ஈஸிகேஷ் முறை மூலம் பணத்தைப் பெற்று, போதைப்பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் (17) ஆம் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கினிகத்தேனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஸ்ஸங்க கொடமுன்ன மற்றும் கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் விராஜ் விதானகே ஆகியோரின் மேற்பார்வையில், கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles