கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் ; மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய கௌரவமாகும்-ஆனந்தகுமார்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் விசேட குழுவின் உறுப்பினரும்  ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையக மக்களில் இருந்து ஒருவர் முதல் முறையாக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையை கட்சிபேதங்கள் கடந்து அனைவரும் வரவேற்க வேண்டும். இதொகாவை வழிநடத்தும் செந்தில் தொண்டமான், கிடைக்கப்பெற்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பதவியின் ஊடக மேலும் பல சேவைகளை செய்ய வாழ்த்துகிறேன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மிக நீண்டகாலமாக உள்ளது. அதற்கு தகுதியான ஒருவராக செந்தில் தொண்டமான உள்ளார். கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நியமனம் பல வெற்றிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்குமென நம்புகிறேன்.

அனைத்து தரப்பினருடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவராகவுள்ள செந்தில் தொண்டமானை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் வேண்டிக்கொள்கிறேன். அதேபோன்று கிழக்கு மாகாண அரசியல் தலைவர்களும் அவருடன் இணைந்து தமது பணிகளை சுமூகமாக செய்துகொள்ள கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுகிறேன்.

செந்தில் தொண்டமானின் நியமனம் என்பது சமகால அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய ஒரு கௌரவமாகவே பார்க்கிறேன். உயர்பதவிகளில் எப்போதும் கண்டுகொள்ளப்படாதிருந்த சமூகத்துக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்துவரும் முக்கியத்துவத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் மேலும் பல சேவைகளை மலையக மக்களுக்கு செய்வசத்தில் உறுதியாகவுள்ளார். அதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க வேண்டுமெனவும் எனவும் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles