விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது, அந்த விசாரணைக்கு அவரும் ஒத்துழைப்பு வழங்குகின்றார். கட்சி என்ற வகையில் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஆதரவை வழங்க தயார்.
அதேபோல இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது பற்றியும் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும். அமைச்சரவை பத்திரம் பற்றியும், அமைச்சரவை அனுமதி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அவை தொடர்பிலும் தேடி பார்க்க வேண்டும். இதை அரசியல் மயப்படுத்தினால் எவருக்கும் நீதி கிடைக்காது.” – என்றார்.