இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கேப்டவுனில் நடக்க இருந்த இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பார்ல் நகரில் நேற்று நடக்க இருந்த முதலாவது ஒரு நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து குழுவில் இடம் பெற்றுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக இரு நாட்டு கிரிக்கெட் சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்டது வீரர்களா? அல்லது பயிற்சி உதவியாளர்களா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்கள் 2 பேர் கொரோனாவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மறுபடியும் ஒரு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகே எஞ்சிய இரு போட்டிகளும் நடக்குமா? என்பது தெரிய வரும்.