கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
பூவெலிகட தெல்லங்க பகுதியில் வைத்து நேற்று அதிகாலை , இரண்டு மணிக்கு கம்பளை விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு , நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தவுலகல, பூவெலிகட, தஸ்கர, வெலம்பொட, வட்டதெனிய போன்ற பகுதிகளில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேற்படி கழிவு தேயிலைகளை பல்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி நிறமாற்றப்பட்டு நல்ல தேயிலைகளுடன் கலப்படம் செய்து உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் , மேற்படி கழிவுத்தேயிலையினை அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதோடு , வெளிநாடுகளிலும் சிலோன் டீ என்ற நாமத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்படியான நடவடிக்கைகளை தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் நேற்று16 ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பளை சிறப்பு அதிரடிப்படை முகாமின் கட்டளை தளபதி நளிந்த குமார உதாரம்ப உள்ளிட்ட குழுவினரே மேற்படி சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டனர்.