யாழ்ப்பாணம் நீதிமன்றத்திலுள்ள வழக்கு விசாரணைக்கு சாட்சிக்காக வந்த நபர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட பிரதான சந்தேக நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு வழக்கில் சாட்சிக்காக கடந்த மே 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் வெட்டி தாக்க முற்பட்ட மூவரில் இருவர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு வாள்வெட்டு தொடர்பாக மூன்று திறந்த பிடியாணை உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
