இஸ்ரேல் – அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற அழைப்பை அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக லட்சக் கணக்கான இராணுவத்தை இஸ்ரேல் காசா எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக தற்போது அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. இங்கிலாந்தும் தனது விமானத் தளத்தைக் கொண்ட கப்பலை இஸ்ரேலுக்கு ஆதரவாக அனுப்பிவைத்துள்ளது. மறுபுறம் ஜேர்மனியும் இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் சவூதி அரேபியா தலைவர்கள் இன்று தொலைபேசி மூலம் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளனர். சியா – சன்னி முஸ்லிம் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு இந்தப் பிரச்சினையில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த நீண்ட நேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எவ்வாறு களமிறங்குவது என்பதே இந்த உரையாடலின் மையப்புள்ளியாக அமைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர், நாளை சிரியாவிற்கு செல்லவிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதாகவும் சிரியாவின் தேசிய ஊடகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக அல்லது பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அணி திரள வேண்டுமென்று ஈரான் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ள நிலையில், லெபானன், சிரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கே ஈரான் வெளியுறவு அமைச்சர் சிரியா செல்லவிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் ளெியுறவு அமைச்சரின் பயணத்தைத் தடுப்பதற்கும், ஒரு எச்சரிக்கையாகவும் இஸ்ரேல் இந்தத் திடீர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் போராட்டத்தை விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.










