இரத்தினபுரி, கண்டி, காலி, மாத்தறை உட்பட நாட்டில் ஆறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2,323 குடும்பங்களைச் சேர்ந்த 8,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் இருவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
27 வீடுகள் முழுமையாகவும், 1, 126 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன .
897 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 10 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
