அடுத்த பொதுத்தேர்தலில் பஸில் ராஜபக்ச கொழும்பு மாவட்டத்திலும், தம்மிக்க பெரேரா கம்பஹா மாவட்டத்திலும் களமிறங்குவார்கள் – என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்கும் வகையிலேயே எதிர்வரும் 5 ஆம் திகதி பஸில் ராஜபக்சவுக்கு விமான நிலையத்தில் இருந்து வரவேற்பளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் உதயங்க வீரதுங்க கூறியவை வருமாறு,
“அடுத்து பொதுத்தேர்தல் என்பது உறுதி. அந்த உறுதிமொழியை பஸில் பெற்றுவிட்டார். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் களமிறங்கமாட்டார். அவருக்கு பதிலாக அவரின் மகன் ரோஹித ராஜபக்ச போட்டியிடுவார்.
போட்டியிடுவது தொடர்பில் மஹிந்த இன்னும் தீர்மானிக்கவில்லை. சிலவேளை சமல் ராஜபக்சவும் போட்டியிடாமல் இருக்கக்கூடும். அவர் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம்.நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டையிலும், பஸில் ராஜபக்ச கொழும்பிலும் களமிறங்குவார்கள். கம்பஹா மாவட்டத்தில் தம்மிக்க பெரேராவை போட்டியிடவைப்போம்.” – என்றார்.










